×

நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் பட்டியலின பள்ளி மாணவர் தாக்கப்பட்ட சம்பவத்தில் மேலும் ஒரு சிறுவன் கைது..!!

நெல்லை: நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் பட்டியலின பள்ளி மாணவர் தாக்கப்பட்ட சம்பவத்தில் மேலும் ஒரு சிறுவன் கைது கைது செய்யப்பட்டார். நெல்லை மாவட்டம், நாங்குநேரி பெருந்தெருவைச் சேர்ந்த தம்பதி முனியாண்டி – அம்பிகா. இவர்களுக்கு சின்னத்துரை (17) என்ற மகனும், சந்தானசெல்வி (15) என்ற மகளும் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக தம்பதியர் பிரிந்து வாழ்கின்றனர்.

தாத்தா கிருஷ்ணனின் பராமரிப்பில் இருந்து வந்த சின்னத்துரை வள்ளியூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ் 2, சந்தானசெல்வி 10ம் வகுப்பும் படித்து வருகின்றனர். சின்னத்துரை ஒரு வாரமாக பள்ளிக்கு செல்லாததால் தாத்தா கண்டித்து பள்ளிக்கு அனுப்பினார். கடந்த 9ம்தேதி பள்ளிக்கு சென்ற சின்னத்துரையிடம் வகுப்பு ஆசிரியர் விசாரித்த போது, சக மாணவர்கள் சிலர் அவதூறாக பேசுவதால் பள்ளிக்கு வரவில்லை என தெரிவித்துள்ளார்.

இதையடுத்து ஆசிரியர் அந்த மாணவர்களை கண்டித்ததுடன், ‘இதுபோன்று நடந்தால் பள்ளியை விட்டு நீக்கப்படுவீர்கள்’ என்று எச்சரித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் சிலர் 9ம் தேதி இரவு சின்னத்துரை வீட்டுக்கு சென்று அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதைத் தடுத்த தங்கை சந்தானலட்சுமிக்கும் வெட்டு விழுந்தது. அவர்களின் அலறல் கேட்டு, பக்கத்து வீட்டினர் ஓடி வரவே அவர்கள் தப்பியோடி விட்டனர்.

படுகாயமடைந்த இருவரும் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கிடையே பேரன், பேத்தி அரிவாளால் வெட்டப்பட்டதை பார்த்த தாத்தா கிருஷ்ணனுக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் நாங்குநேரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு அவர் இறந்தார். இதுகுறித்து நாங்குநேரி இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஆதம்அலி மற்றும் போலீசார் வழக்குப்பதிந்து, அண்ணன், தங்கையை வெட்டிய 3 மாணவர்களை நாங்குநேரியைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவர்கள் மேலும் 3 பேரை கைது செய்து பாளையில் உள்ள கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர்.

பாதிப்புக்குள்ளான மாணவன் மீதான வன்முறை சம்பவம், தமிழ்நாடு முழுவதும் பரவிய நிலையில், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், தம்பி சின்னதுரை விரைவில் குணமடைய வேண்டுவதாகவும், சாதிதான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும் என்று ஒரு ட்வீட் செய்துள்ளார். அதனைத் தொடர்ந்து பல்வேறு தரப்பில் கண்டனங்கள் மற்றும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். இதுவரை 6 மாணவர்கள் கைதாகியுள்ள நிலையில் தலைமறைவாகவுள்ள மேலும் ஒரு மாணவரை போலீசார் தேடி வந்த நிலையில் இன்று மேலும் ஒரு சிறுவனை போலீசார் கைது செய்தனர். பள்ளி மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக 9 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது.

The post நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் பட்டியலின பள்ளி மாணவர் தாக்கப்பட்ட சம்பவத்தில் மேலும் ஒரு சிறுவன் கைது..!! appeared first on Dinakaran.

Tags : Nellai district ,Nanguneri ,Nellai ,Nellai district.… ,Dinakaran ,
× RELATED நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம்...